×

தேனி நகரில் நெரிசலுக்கு முக்கிய காரணம் 20 ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் திட்டச்சாலைகள்

தேனி: தேனி நகராட்சியில் கடந்த 20 ஆண்டுகளாக திட்டச்சாலை பணிகள் நிறைவடையாமலே உள்ளது. நகரில் தற்போது நிலவும் நெரிசலுக்கு இதுவே முக்கிய காரணம் என வியாபாரிகள் கடும் புகார் எழுப்பி உள்ளனர். இதுகுறித்து தேனி மாவட்ட வியாபாரிகளின் சங்க முக்கிய நிர்வாகிகள் கூறியதாவது: தேனி நகரில் 20 ஆண்டுகளுக்கு முன்னர் நான்கு திட்டச்சாலைகளை கையகப்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து, பணிகளை தொடங்கியது. அப்போது நிலங்களின் விலைகளும் குறைவாக இருந்தன. எதிர்ப்புகளும் பெரிய அளவில் இல்லை. இருப்பினும் மாவட்ட நிர்வாகமோ, தேனி நகராட்சி நிர்வாகமோ துரிதமாக பணிகளை தொடங்கி திட்டச்சாலைகளை அமைக்கவில்லை. குறிப்பாக ஸ்ரீராம் நகர் திட்டச்சாலை, உழவர்சந்தை திட்டச்சாலை, அரண்மனைப்புதூர் திட்டச்சாலை என எந்த சாலை பணியையும் முடிக்கவில்லை. அல்லிநகரம் திட்டச்சாலை தற்போது நான்கு வழிச்சாலை ஆணையத்தின் மூலம் நடந்து வருகிறது. இந்த பணிகள் தொடங்கி பல ஆண்டுகள் ஆகியும் இன்னமும் மந்த கதியில் நடந்து வருகிறது.

அவசர தீர்வாக இந்த நான்கு வழிச்சாலை பணிகளையும், அரண்மனைப்புதூர் திட்டச்சாலை பணிகளையும் விரைந்து அமைத்தால், நகரின் நெரிசல் 60 சதவீதம் குறைந்து விடும். குறிப்பாக நகரின் மையத்தில் ‘பறக்கும் சுற்றுப்பாலத்துடன் கூடிய மேம்பாலம்’ கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டச்சாலை பணிகளை முடிக்காமல் நகருக்குள் ‘பறக்கும் சுற்றுப்பாலத்துடன் கூடிய மேம்பாலம்’ அமைத்தால் நெரிசலின் தீவிரம் கூடி விடும். எனவே முதலில் மாற்று வழிகளை செய்து முடித்த பின்னர், நகருக்குள் மேம்பால பணிகளை தொடங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Tags : Theni , Theni
× RELATED தேனி புதிய பஸ்நிலையம் அருகே பை-பாஸ்...