×

உழைப்பிற்கு வயதில்லை: 104 வயதிலும் துடைப்பம் விற்கும் மூதாட்டி

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே ஆதரவு ஏதுமின்றி தனது 104 வயதிலும் துடைப்பம் செய்து விற்று தனது காலத்தை கடத்தி வருவது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள பாக்கியராஜ் நகரை சேர்ந்தவர் நீலாம்பாள்(102). இவரது கணவர் அரியலூர் மாவட்டம் தேவமங்கலத்தை சேர்ந்த வாசுதேவன். இவர்களுக்கு முத்தையன், கிருஷ்ணமூர்த்தி என்ற மகன்கள், லட்சுமி என்ற மகள் இருந்தனர். கணவரும், 2 மகன்களும் இறந்து விட்டனர். லட்சுமியை விட்டு அவரது கணவர் பிரிந்து விட்டார். இதனால், மகனுடன் லட்சுமி வெளியூரில் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் எந்த ஆதரவும் இல்லாமல், நீலாம்பாள் 104 வயதிலும் உழைத்து வாழ்க்கையை நடத்தி வருகிறார். வயலுக்கு சென்று நானல் புல் அறுத்து வந்து, அதில் துடைப்பம் செய்து விற்று வாழ்க்கையை ஓட்டுகிறார். இதுபற்றி நீலாம்பாள் கூறுகையில், ஓலைக்குடிசையில் வசித்து வருகிறேன். எனது கணவரும், மகன்களும் இறந்த பிறகு தலையில் பழங்கள் சுமந்து சென்று விற்றேன். இப்போது துடைப்பம் விற்று வருகிறேன். ஒரு நாளைக்கு 3 துடைப்பம் விற்பேன். 30 ரூபாய் கிடைக்கும். அதில் தான் வாழ்க்கையை ஓட்டி வருகிறேன். முதியோர் உதவித்தொகை கேட்டு அதிகாரிகளிடம் பலமுறை விண்ணப்பித்துள்ளேன். ஆனால் எனக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை. முதியோர் உதவித்தொகை கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றார்.

Tags : Never Too Old ,mint ,Godmother , Godmother
× RELATED ரஷ்ய அதிபர் புதின் வெற்றி கொண்டாட்டம்..!!