×

குண்டு பாகற்காய் சாகுபடியில் ஆப்பனூர் விவசாயிகள் ஆர்வம்

சாயல்குடி:  ஆப்பனூர் குண்டு பாகற்காய் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடலாடி தாலுகாவில் பெரிய கிராமமாக ஆப்பனூர் உள்ளது. ஆப்பனூர் தோப்பு கொட்டகை, தெற்குகொட்டகை என 10க்கும் மேற்பட்ட குக்கிராமங்களை உள்ளடக்கி உள்ளது. இங்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. விவசாயத்தை மட்டுமே நம்பி தொழில் செய்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக போதிய பருவ மழையின்றி விவசாயம் பொய்த்து போய் வருவதால் நெல் விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டு வந்தது. நெல் விவசாயத்தோடு நிற்காமல், சுமார் 100 வருடங்களுக்கு மேலாக பாகற்காய் சாகுபடியில் இக்கிராமமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஆப்பனூர் கண்மாய் மற்றும் கரை, கிளை நீர்நிலைகள், வரத்து கால்வாய்களில் வண்டல் மண் எனப்படும் கரம்பை மண் நிலமாக அமைந்துள்ளது. இதில் குண்டு மிதி பாகற்காயை சாகுபடி செய்து வருகின்றனர்.

தற்போது இப்பகுதியில் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் கண்மாய் வெட்டு கிடங்குகளில் தண்ணீர் பெருகி கிடக்கிறது. கண்மாயில் பயிரிடப்பட்ட செடிகள் மட்டும் தண்ணீரில் மூழ்கி நாசமாயின. இருந்த போதிலும் கண்மாய்கரை, வரத்துகால்வாய் கரை, உள்ளிட்ட கிளை நீர்நிலை கரைகள், விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட பாகற்காய் நன்றாக வளர்ந்து தற்போது காய் காய்த்து வருகிறது.  காயை விவசாயி வீட்டு ஆட்களுடன், கூலியாட்களை கொண்டு பறித்து வருகின்றனர்.

இதனை மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட சந்தைகளிலும், கடைகளிலும் விற்று விவசாயிகள் லாபம் ஈட்டி வருகின்றனர். இது குறித்து ஆப்பனூர் விவசாயிகள் கூறும்போது, சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாகற்காய் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். கரம்பை மண் களிமண்ணாக மாறக்கூடிய தன்மை கொண்டது என்பதால், கொஞ்சம் ஈரப்பதம் இருக்கும் போதே விதை, விதைத்து விடுவோம். ஒரு வாரத்திற்குள் செடி முளைத்ததும், பூ, பூத்து காய் காய்த்து விடும். சுமார் 6 வாரங்கள் வரை நல்ல மகசூல் கிடைக்கும், நல்ல விளைச்சல் கிடைக்கும்போது, கிலோ ஒன்றிற்கு ரூ.30 முதல் 50 வரை விலைக்கு விற்போம். முன்கால பருவமழைக்கு கண்மாயில் போடப்பட்ட பாகற்காய் செடிகள் நன்றாக வளர்ந்து வந்த நிலையில், தற்பொது பெய்த மழைக்கு கண்மாயில் தண்ணீர் வந்ததால்  அப்பகுதியில் மட்டும் நாசமாயின. இதனால் சில விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டது. ஆனால் வடகிழக்கு பருவமழைய எதிர்பார்த்து நீர்நிலை கரையோரங்கள், விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டதால் இந்தாண்டு பாகற்காய் நல்ல மகசூல் கிடைத்துள்ளது. அதிக கசப்பு தன்மையின்றி, மருத்துவ குணம் வாய்ந்தது என்பதால், அதிகளவில் விற்பனையாகிறது.

முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, இளையான்குடி, கமுதி, பரமக்குடி சந்தைகளில் நேரடியாக சென்றும், மற்ற நாட்களில் கடைகள் மூலமாக விற்று வருகிறோம். இதனை மதுரை போன்ற நகரங்களுக்கு கடை வியாபாரிகள் விற்று வருகின்றனர்.
வறட்சி மற்றும் கோடை காலத்திலும் பாகற்காய் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, கண்மாய் உள்ளிட்ட நீர்நிலை கரையோரத்தில் தண்ணீர் தொட்டிகள் கட்டி தரவேண்டும், அரசு மானியத்தில் ஸ்பிரிங்கர் தண்ணீர் தெளிப்பான், சொட்டு நீர் பாசன குழாய்கள், உரங்கள் வழங்க வேண்டும் என்றார்.

Tags : growers , Farmers
× RELATED அனைத்து சிறு தேயிலை விவசாயிகளுக்கும் மானியம் வழங்க கோரிக்கை