3 லட்சத்துக்கு விற்கப்பட்ட குழந்தை விழுப்புரத்தில் மீட்பு

சேலம்:  சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே நைனாம்பட்டியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி மீனா. இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்தனர். கடந்த ஜூன் மாதம் மீனாவுக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது, மீனாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கோவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  தகவலறிந்து வந்த மீனாவின் பெற்றோர், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது கணவரும், குழந்தையும் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். பின்னர் மீனா திருப்பூருக்கு சென்று விசாரித்ததில் குழந்தை ₹3 லட்சத்துக்கு விற்கப்பட்டதும், கணவர் ராஜா உயிரோடு இருப்பதும் தெரிந்தது. இதுகுறித்து சேலம் கலெக்டரிடம் மீனாவும் அவரது கணவரும் புகார் செய்தனர். இதன்படி ஆட்டையாம்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தையை விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் உறவுப்பெண் ஒருவரிடம் கொடுக்கப்பட்டது தெரிந்தது. குழந்தையை போலீசார் நேற்று மீட்டு, சேலத்தில் உள்ள காப்பகத்தில் நேற்றிரவு ஒப்படைத்தனர். இன்று குழந்தையை மீனா, ராஜா தம்பதியிடம் ஒப்படைக்க உள்ளதாக போலீசார் கூறினர்.

Related Stories: