×

மாநகராட்சி, போக்குவரத்து போலீசார் இணைந்து சென்னை முழுவதும் நடைபாதை வாகனங்களை அகற்ற வேண்டும் : ஐகோர்ட் உத்தரவு

சென்னை : மாநகராட்சி மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து நடைபாதையில் உள்ள வாகனங்களை அகற்றிவிட்டு, அது குறித்த அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகரில் நடைப்பாதைகளை முறையாக பராமரிக்க கோரிய வழக்கில், நடைபாதை ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கை குறித்து மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வழக்கு நேற்று மீண்டும் நீதிபதிகள் சத்திய நாராயணன், சேசஷாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் ஆஜரானார்.
அவரிடம் நீதிபதிகள், உயர் நீதிமன்ற உத்தரவின்படி என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், தமிழ்நாடு நடைபாதை வியாபாரிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் அடிப்படையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் நடைபாதை வியாபாரிகள் அடையாளம் காணப்பட்டு 40 ஆயிரம் நடைபாதை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கபட்டுள்ளது.

அதேபோல, எந்தெந்த பகுதிகளில் வியாபாரம் செய்ய முழு நேர அனுமதி, எங்கு பகுதி நேர அனுமதி, எங்கு அனுமதியில்லை என்பது குறித்து திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் முழுமையடைய ஓராண்டு ஆகும். சென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் வாகன நிறுத்தம் மற்றும் நடைபாதை வியாபாரம் செய்வதை தடுக்கவும் ஆக்கிரமிப்புகள் வராமல் பாதுகாக்கவும் தனியார் நிறுவனத்துடன் 5 ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  சென்னையில் 11 லட்சத்து 20 ஆயிரம் 4 சக்கர வாகனங்களும், 54 லட்சம் இரு சக்கர வாகனங்கள் உள்ளன. இந்த எண்ணிக்கையை கணக்கில் கொண்டு சென்னையில் 65 இடங்களி பல அடுக்கு வாகன நிறுத்தங்களை கட்ட  திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக பிராட்வேயில் 1400 கார்களை நிறுத்தம் வகையில் வணிக வளாகத்துடன் கூடிய பல்அடுக்கு வாகன நிறுத்தம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்திற்கு எதிரே என்.எஸ்.சி போஸ் சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவில் வரும் வெள்ளிக் கிழமைக்குள் இடிக்கப்படும். ஏற்கனவே, அந்த கோயிலுக்கு தரப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சென்னை மாநகராட்சி மற்றும் போக்குவரத்து காவல்துறை இணைந்து சென்னை முழுதும் நடைப்பாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து அதன் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், தமிழ்நாடு நடைபாதை வியாபாரிகள் சட்டப்படி சென்னை முழுவதுமுள்ள  15 மண்டலங்களிலும் நடைபாதை வியாபாரிகளை கணக்கெடுத்தது தொடர்பாக கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : corporation ,Chennai Municipal ,Chennai , Municipal corporation, traffic police , clear sidewalks across Chennai
× RELATED சென்னையில் போலீசார் தபால் வாக்கு...