அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 8 பேர் லண்டன் பயணம்

சென்னை: சென்னை மாநகராட்சி கல்வித்துறையும், சென்னை கிழக்கு ரோட்டரி சங்கமும் இணைந்து “wings to fly” என்ற திட்டத்தின் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் தொடர்பான போட்டிகளை நடத்தி வருகிறது. இதில் வெற்றி பெறுபவர்கள் வெளி நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர். அதன்படி, 2015-16ம் ஆண்டில் 7 பேர் மலேசியாவிற்கும், 2016-17ம் ஆண்டில் 8 பேர் ஜெர்மனிக்கும்,  2017-18ம் ஆண்டில்  8 பேர் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்திற்கும், 2018-19ம் ஆண்டில் 26 பேர் சிங்கப்பூருக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில் 2019-20ம் ஆண்டிற்கான போட்டியில் 4000 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 160 பேர் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற 8 பேர் லண்டனுக்கு கல்வி சுற்றுலா செல்ல உள்ளனர்.

இந்த மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு விழா நேற்று ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடந்தது. இதில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மாணவ, மாணவிகளை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில், கல்வி துணை ஆணையர் (பொறுப்பு)  ஆல்பி ஜான் வர்கீஸ், பிரிட்டிஸ் கவுன்சில் சொசைட்டி உதவி இயக்குனர் தீபா சவுந்தராஜன், மாநகராட்சி கல்வி அலுவலர் பாரதிதாசன், கூடுதல் கல்வி அலுவலர், உதவி கல்வி அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: