மக்கள் முகமூடி அணிய விதிக்கப்பட்ட தடையை நீக்கிய ஹாங்காங் நீதிமன்றத்துக்கு சீன அரசு கடும் கண்டனம்

பிஜீங்:  மக்கள் முகமூடி அணிய ஹாங்காங் அரசு விதித்த தடையை உயர் நீதிமன்றம் நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, ‘ஹாங்காங் அரசியலமைப்பை தான் மட்டுமே ஆட்சி செய்ய முடியும்,’ என்று கூறியுள்ளது. ஹாங்காங்கில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை சீனாவுக்கு நாடு கடத்தும் கைதிகள் பரிமாற்ற மசோதாவை அரசு கொண்டு வந்தது. நாடு முழுவதும் இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தது. இதனை தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் முதல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதலில் மக்கள் அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், வன்முறையில் ஈடுபட்டனர்.  போராட்டம் வலுத்ததால், குற்றவாளிகள் பரிமாற்ற மசோதாவை கைவிடுவதாக ஹாங்காங் அரசு அறிவித்தது. தற்போது, சீனாவின் அத்துமீறலில் இருந்து மக்களின் சுதந்திரத்தை காப்பது, ஜனநாயக உரிமை உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் முகமூடி அணிவதற்கு ஹாங்காங் அரசு கடந்த மாதம் தடை விதித்தது. இதற்கு போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஹாங்காங் உயர் நீதிமன்றத்தில் அரசின் தடையை எதிர்த்து வழக்கும் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்கள் முகமூடி அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது அரசியலமைப்புக்கு எதிரானது என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும், தடையை நீக்கியது. இந்த உத்தரவுக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது பற்றி சீன நாடாளுமன்ற செய்தி தொடர்பாளர் ஜாங் திவே கூறுகையில், “ஒரு சட்டமானது அடிப்படை சட்டத்துக்கு உட்பட்டதா என்பதை முடிவு செய்யும் உரிமை சட்டமன்றத்துக்கு மட்டும்தான் உள்ளது. வேறு எந்த  நிறுவனத்துக்கும் தீர்ப்பு அல்லது முடிவு செய்யும் அதிகாரம் கிடையாது. ஹாங்காங்கின் அரசியலமைப்பு சட்டத்தை ஆட்சி செய்யும் அதிகாரம், சீனாவுக்கு மட்டுமே உள்ளது,’ என்றார்.

Related Stories: