பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச முடியாத ஏழைக் குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்வதற்காக சன் பவுண்டேஷன் ரூ.95.79 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாக, ஏழை எளியோரின் கல்வி, மருத்துவச் சிகிச்சை உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் பல்வேறு அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச முடியாத ஏழைக் குழந்தைகளுக்கு காக்ளியர் இம்பிளான்ட் என்ற நவீன அறுவை சிகிச்சை செய்வதற்காக சன் பவுண்டேஷன் ரூ.95.79 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது.
இதற்கான காசோலையை, மெட்ராஸ் இ.என்.டி. ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் டாக்டர் மோகன் காமேஸ்வரன், கல்வி இயக்குநர் ஆனந்த்குமார், நிர்வாக இயக்குநர் ஜெகன்னாத் ஆகியோரிடம் சன் பவுண்டேஷன் சார்பில் காவேரி கலாநிதி மாறன் வழங்கினார். நலிவடைந்த மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் நோக்கில் தொடங்கப்பட்ட சன் பவுண்டேஷன் மூலம் ஏழை எளியோருக்கு கல்வி, தரமான இலவச சிகிச்சை, மகளிர் மற்றும் இளைஞர் நலன், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக சன் பவுண்டேஷன் இதுவரை 71 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.