கோவை: கோவையில் நடுரோட்டில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த கல்லூரி மாணவி ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் சினேகா (19). இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் (சிஏ) 2ம் ஆண்டு படித்து வருகிறார். சக கல்லூரி தோழிகளுடன் அருகில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வருகிறார். இவர் சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊர் சென்றுவிட்டு நேற்று அதிகாலை விடுதிக்கு திரும்பினார். காலை 6 மணியளவில் விடுதியில் இருந்து வெளியே வந்த சினேகா, திடீரென நடுரோட்டில் நின்றபடி கேனில் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அவ்வழியாக சென்றவர்கள் தீயை அணைத்து சினேகாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவருடைய உடலில் 90 சதவீத தீக்காயம் இருந்தது. எனவே அவர் மேல் சிகிச்சைக்காக பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், மாணவி சினேகா ஒருவரை காதலித்து வந்ததாகவும், அந்த காதல் தோல்வியில் முடிந்ததால் விரக்தியடைந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரியவந்தது. இது தொடர்பாக பீளமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.