மாவோயிஸ்ட் தீபக்கை காவலில் எடுக்க போலீஸ் மனு வாபஸ்: வக்கீல்கள் சந்திக்க தடை விதிப்பதாக புகார்

கோவை: கோவை ஆனைகட்டி வனப்பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினர் சோதனையின்போது சட்டீஸ்கரை சேர்ந்த மாவோயிஸ்ட் தீபக் (32) கடந்த 9ம் தேதி சிக்கினார். அவரது இடது காலில் ஏற்பட்ட காயத்திற்காக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.  இந்நிலையில், மாவோயிஸ்ட் தீபக்கை சந்தித்து பேச அனுமதிக்க வேண்டும் என   வக்கீல் பவானி மோகன் உட்பட சில வக்கீல்கள் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முறையிட்டனர். அதற்கு நீதிபதி சக்திவேல் அனுமதி வழங்கினார். கோர்ட் உத்தரவை காட்டி, தீபக்கை சந்திக்க வக்கீல் பவானி மோகன் மற்றும் அவரது குழுவினர் நேற்று மதியம் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கே சிறைவாசிகள் வார்டில் சிகிச்சையில் இருந்த தீபக்கை அவர்கள் சந்திக்க போலீசார் அனுமதிக்க மறுத்து விட்டனர். மருத்துவமனை நிர்வாகத்தினரை சந்தித்து கோர்ட் உத்தரவை காட்டி கேட்டபோது அவர்களும் அனுமதி தரவில்லை. இது தொடர்பாக வக்கீல் பவானி மோகன், மாவட்ட நீதிபதியை சந்தித்து முறையிட்டார்.

இந்நிலையில் தடாகம் போலீசார் தீபக்கை 10 நாள்  காவலில் எடுக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில்  மனுவை வாபஸ் பெறுவதாக மனு கொடுத்தனர். இதற்கிடையில் நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து தீபக் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் கோவை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். காத்திருக்கும் சட்டீஸ்கர் போலீசார்: தீபக்கை தேடி வந்த சட்டீஸ்கர் போலீசார் கோவையில் 3 நாளாக முகாமிட்டு காத்திருக்கின்றனர். தீபக்கை காவலில் விசாரிக்க கோவை போலீசாருக்கு அனுமதி கிடைத்தால் தாங்களும் விசாரிக்கலாம் என நினைத்திருந்தனர். கோவை சிறையில் தீபக் அடைக்கப்பட்டால் ‘வாரன்ட்’ டை காட்டி அழைத்து செல்ல உள்ளனர்.

Related Stories: