கோவை: கோவை ஆனைகட்டி வனப்பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினர் சோதனையின்போது சட்டீஸ்கரை சேர்ந்த மாவோயிஸ்ட் தீபக் (32) கடந்த 9ம் தேதி சிக்கினார். அவரது இடது காலில் ஏற்பட்ட காயத்திற்காக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், மாவோயிஸ்ட் தீபக்கை சந்தித்து பேச அனுமதிக்க வேண்டும் என வக்கீல் பவானி மோகன் உட்பட சில வக்கீல்கள் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முறையிட்டனர். அதற்கு நீதிபதி சக்திவேல் அனுமதி வழங்கினார். கோர்ட் உத்தரவை காட்டி, தீபக்கை சந்திக்க வக்கீல் பவானி மோகன் மற்றும் அவரது குழுவினர் நேற்று மதியம் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கே சிறைவாசிகள் வார்டில் சிகிச்சையில் இருந்த தீபக்கை அவர்கள் சந்திக்க போலீசார் அனுமதிக்க மறுத்து விட்டனர். மருத்துவமனை நிர்வாகத்தினரை சந்தித்து கோர்ட் உத்தரவை காட்டி கேட்டபோது அவர்களும் அனுமதி தரவில்லை. இது தொடர்பாக வக்கீல் பவானி மோகன், மாவட்ட நீதிபதியை சந்தித்து முறையிட்டார்.