காரில் செல்லும்போது வழிவிடாததால் ஆத்திரம் சினிமா உதவி இயக்குநர் மண்டை உடைப்பு: பீர் பாட்டிலால் தாக்கிய 2 வாலிபர் கைது

சென்னை: காரில் செல்லும்போது வழிவிடாத ஆத்திரத்தில் சினிமா உதவி இயக்குநரை சரமாரியாக அடித்து, பீர் பாட்டிலால் மண்டையை உடைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (28). திரைப்பட இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக வேலை செய்து வருகிறார். ேநற்று முன்தினம் இரவு தனது நண்பருடன் கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேசன் சாலையில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடிக்க காரில் வந்துள்ளார்.கோடம்பாக்கம் ரயில்வே பார்டர் சாலையில் செல்லும் போது, எதிரே வந்த வேன் ஒன்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது உதவி இயக்குநர் பின்னால் கால் டாக்சியில் வந்த இரண்டு பேர் காரில் இருந்து இறங்கி வந்து உதவி இயக்குநரின் நண்பர் சீனிவாசனை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.

அப்போது தட்டிக்கேட்ட உதவி இயக்குநரை இருவரும் சரமாரியாக அடித்து உதைத்து கையில் வைத்திருந்த பீர்பாட்டிலை எடுத்து மண்டையில் தாக்கி உள்ளனர். இதில் மண்டை உடைந்து ரத்த கொட்டியது. அவர் அலறி துடித்தார். தகவல் அறிந்து கோடம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயமடைந்த பிரபாகரனை மீட்டு சென்னை  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு வலது காது, முதுகு, கழுத்து பகுதிகளில் மொத்தம் 12 தையல் போடப்பட்டது. சம்பவம் குறித்து கோடம்பாக்கம் போலீசில் பிரபாகரன் புகார் செய்தார். போலீசார், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று தேனாம்பேட்டை எஸ்எம் நகரை சேர்ந்த பாபு (32), ராஜ்குமார் (39) ஆகியோரை நேற்று அதிகாலை கைது செய்தனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் கோடம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: