கண்ணமங்கலம்: திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த, வெல்லூர் கிராமத்தில் ‘சம்புவராயர் ஆய்வு மையத்தின்’ சார்பில் முனைவர் அமுல்ராஜ், வரலாற்று ஆய்வாளர் விஜயன் மற்றும் வெல்லூர் கிராமத்தைச் சார்ந்த சமூக ஆர்வலர் பீமன் ஆகியோர் நேற்று வரலாற்று தடயங்கள் குறித்த கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது வயல்வெளியில் சாய்ந்த நிலையில் இருந்த ‘விஷ்ணு துர்கை’ சிற்பம் ஒன்று கண்டறியப்பட்டது. இச்சிற்பம் குறித்து முனைவர் அமுல்ராஜ் கூறியதாவது: மகாவிஷ்ணுவை போல் காணப்படும் இச்சிற்பம் விஷ்ணுவின் தங்கையான ‘விஷ்ணு துர்கை’ சிற்பமாகும். நான்கு கரங்களுடன் பலகை கல்லில் சுமார் 4 அடி உயரம், 2 அடி அகலத்தில் காணப்படும் இச்சிற்பத்தின் முகம் சிதைந்த நிலையில் உள்ளது. தலையில் கூம்பு வடிவ கிரீடம் காணப்படுகிறது. வலது பின்கரத்தில் சங்கு உள்ளது. முன்கரம் அபய முத்திரை தாங்கியுள்ளது.