உடுமலை: மூணாறு சாலையில் ஒற்றைக் கொம்பன் யானை வாகன ஓட்டுநர்களை மிரட்டி வருகிறது. இதைத்தொடர்ந்து எச்சரிக்கையுடன் செல்லும்படி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் சாலையில் காமனூத்து பிரிவு பகுதியில் கடந்த சில தினங்களாக ஒற்றைக் கொம்பன் யானை ஒன்று நடமாடி வருகிறது. இந்த யானை சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை துரத்தி வருகிறது. இதனால் இந்த சாலையில் செல்வோர் பீதி அடைந்துள்ளனர். கேரள மாநிலம் மறையூர் பகுதியில் இருந்து தினசரி ஏராளமானோர் இரு சக்கர வாகனங்களிலும், ஜீப், வேன்களிலும் உடுமலைக்கு பொருட்கள் வாங்க வருகின்றனர். சாலையில் யானை நிற்பதால் இவர்கள் அச்சமடைந்துள்ளனர்.