நெல்லை: அம்பை பகுதியைச்சேர்ந்த புதுப்பெண் திருமணமாகி 9 நாளில் மாயமாகி விட்டார். காதல் விவகாரத்தில் அவரை யாராவது கடத்திச்சென்றார்களா? என விசாரணை நடக்கிறது. நெல்லை மாவட்டம் அம்பை அருகில் உள்ள ஊர்க்காடு தெற்கு ரதவீதியைச்சேர்ந்தவர் சங்கரநாராயணன்(34). இவர் பத்தி, கற்பூரம் தயாரித்து கடைகளுக்கு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். நீண்டநாட்களாக திருமணமாகாமல் இருந்த இவருக்கு கங்கைகொண்டான் அருகில் உள்ள இட்டிகுளத்தைச்சேர்ந்த சக்தி(25) என்பவருடன் நிச்சயம் செய்யப்பட்டு கடந்த 10ம்தேதி திருமணம் சிறப்பாக நடைபெற்றது. புது தம்பதிகள் வாழ்க்கை சந்தோஷமாக சென்றநிலையில் சில நாட்களுக்கு முன் தம்பதிகள் மாமனார் வீடான இட்டிகுளத்திற்கு வந்தனர்.
இங்கு மருமகனுக்கு தடபுடலாக விருந்து வைக்கப்பட்டது. இதற்கிடையில் சக்தி நைட்டி தைக்கவேண்டும் கங்கைகொண்டான் பஜாருக்கு சென்று வருவதாக வீட்டில் கூறினார். அப்போது கணவர் சங்கரநாராயணன், நானும் டெய்லர் கடைக்கு வரவா? என்று கேட்டிருகிறார். அதற்கு சக்தி, நான் மட்டும் போய்வருகிறேன் நீங்கள் வீட்டில் இருந்து ஓய்வு எடுங்கள் என்று கூறிவிட்டு அவர் மட்டும் வெளியில் சென்றார். கடைக்கு சென்றவர் நீண்டநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் புதுமாப்பிள்ளை மற்றும் அவரது பெற்றோர்கள் கவலையடைந்து கங்கைகொண்டான் பஜாருக்கு சென்று அங்குள்ள டெய்லர் கடைகளில் இளம் பெண் யாராது நைட்டி தைக்க வந்தார்களா? என விசாரித்தனர். அங்குள்ள டெய்லர்கள், அப்படி யாரும் வரவில்லை என்றனர்.
மேலும் தோழி, உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தனர். சக்திபற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து நேற்று சக்தியின் அண்ணன் இசக்கி கங்கைகொண்டான் போலீசில் புகார் செய்தார். புதுப்பெண் காதல் விவகாரத்தில் யாராவது கடத்திச்சென்றார்களா? என இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி விசாரித்து வருகிறார். திருமணமாகி 9 நாளில் புதுப்பெண் மாயமானது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.