கோவை: கோவையில் இன்று அதிகாலை நடுரோட்டில் கல்லூரி மாணவி உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சினேகா. இவர் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சினேகா அந்த பகுதியில் தனது தோழிகளுடன் அறை எடுத்து தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். அறையில் இருந்த மாணவி சினேகா இன்று அதிகாலை 5 மணியளவில் அறையை விட்டு வெளியேறினார். கோவை- அவினாசி ரோட்டுக்கு வந்த சினேகா திடீரென தான் பாட்டிலில் வைத்து இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ குளித்தார். இதில் தீ மளமளவென அவரது உடல் முழுவதும் பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் அலறி சத்தம் போட்டார்.
நடுரோட்டில் மாணவி தீ பற்றி எரிவதை பார்த்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சினேகாவை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சினேகாவை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த தகவல் கிடைத்ததும் பீளமேடு போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி சினேகா தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிகாலை நடுரோட்டில் கல்லூரி மாணவி உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.