விருதுநகரில் மழைநீர் வரத்து ஓடைகளில் குவியும் பிளாஸ்டிக் குப்பைகள்

விருதுநகர் : விருதுநகரில் மழைநீர்வரத்து ஓடைகளில் குவியும் பிளாஸ்டிக் குப்பைகளால், மழை காலங்களில் சாலைகளில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து தேங்குகிறது. இதனால், சுகாதாரக்கேடும், வாகன ஓட்டிகளுக்கு அவதியும் ஏற்படுகிறது. இதனை தூர்வார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.விருதுநகரில் பழைய பஸ்நிலையம் தொடங்கி அனைத்து கழிவுநீர் வாறுகால்கள் மற்றும் மழைநீர் வடிகால் ஓடைகளிலும் பிளாஸ்டிக் கழிவுகள், மதுபாட்டில்கள் குவிந்து கிடக்கின்றன.

நகரில் மழை பெய்தால் ஒட்டுமொத்த கழிவுநீரும் பிரதான ஓடைகளில் செல்ல வழியின்றி சாலைகளில் தேங்குகிறது. மேற்கு மின்வாரிய அலுவலகம் மற்றும் நகராட்சி முஸ்லீம் பள்ளி இடையே உள்ள நீர்வரத்து ஓடை தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறியுள்ளது. மழை பெய்தால் இந்த ஓடையில் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு மழைநீரும், கழிவுநீரும் மின்வாரிய அலுவலகம் முன்புறம் உள்ள பாவாலி சாலையில் தேங்குகிறது. இதனால், வாகன ஓட்டிகளுக்கு அவதியும் சுகாதாரக்கேடும் ஏற்படுகிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘நகராட்சி நிர்வாகத்திடம் ஜேசிபி இயந்திரம் இருந்தும் கழிவுநீர் ஒடைகளாக மாறிவரும் நீர்வரத்து ஓடைகளை தூர்வார நடவடிக்கை எடுப்பதில்லை. மழை நீர்வரத்து ஓடைகள், கழிவுநீர் கால்வாய்களை தூர்வார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: