பாராளுமன்ற மாநிலங்களவையில் ஜே.என்.யு. விவகாரம், ஜம்மு காஷ்மீர் நிலவரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளி: பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைப்பு

டெல்லி: பாராளுமன்ற மாநிலங்களவையில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரம், ஜம்மு காஷ்மீர் நிலவரம் தொடர்பாக உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பியதையடுத்து பிற்பகல் 2 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று காலை மாநிலங்களவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் அவை கூடியதும் அது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதனால் அவை அலுவல்கள் தொடங்கியதும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக சில உறுப்பினர்கள் பிரச்சினை எழுப்பினர். இதேபோல் வேறு சில உறுப்பினர்கள் ஜம்மு காஷ்மீர் நிலவரம் தொடர்பாக பிரச்சினை எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் முழக்கங்கள் எழுப்பியதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

இதையடுத்து பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல் மக்களவையிலும்  ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக பல்வேறு கட்சிகள் சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கான எஸ்பிஜி பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: