×

விடா முயற்சி... கடின உழைப்பால் குடும்பத்தை தூக்கி நிறுத்தும் ஆண்களுக்கு சர்வதேச ஆண்கள் தின வாழ்த்துகள்

வருடந்தோறும் நவம்பர் 19-ம் தேதி சர்வதேச ஆண்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 1999-ம் ஆண்டு டிரானிடாட் மற்றும் டொபாகோ நாட்டில் தொடங்கப்பட்டு, பின்னர் ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்ட நாளாக இந்நாள் திகழ்கிறது. உலகில் ஆண்களைக் கெளரவப்படுத்தவும், ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருதியும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

ஆண்களுக்கென்று ஏன் ஒரு தனியான நாள் கொண்டாடப்பட வேண்டும் என பலர் கேள்வி எழுப்புகின்றனர். வாழ்கையில் ஆண்களுக்கு என்ன தான் பிரச்னை என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆண்களுக்கென்ன பேண்ட், சட்டை போட்ட ராஜாக்கள். அவர்களால் தான் அடுத்தவங்களுக்கு பாதிப்பு. அவர்களுக்கெல்லாம் ஒரு தினம் தேவையா என கேள்விகள் பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றன.

ஆனால் உண்மை அப்படியல்ல. ஆணுக்கும் பிரச்னைகள் உண்டு. அவனுக்கும் தீமைகள் இழைக்கப்படுகின்றன. ஆண்களுக்கும் பாலியல் தொந்தரவு உட்பட பல்வேறு தொந்தரவுகள் தரப்படுவதை நம் சமூகம் நிச்சயம் உணர வேண்டும். அவனின் பாதுகாப்பிற்காகவும், உரிமைக்காகவும் நிச்சயம் ஒருநாள் கடைபிடிக்கப்பட வேண்டும்.                

ஆண் குழந்தை ஒன்று ஒரு வீட்டில்  பிறந்தால் குடும்பத்தினர் பெரும்பாலும் எவ்வாறு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர் என சற்று சிந்தித்து பாருங்கள். சிங்கக்குட்டி பொறந்துட்டான்டா... இனி அவன் குடும்பத்தை காப்பாத்திடுவான் என பூரிப்புடன் சுற்றமும் , சூழலும் சொல்வதே யதார்த்தம். குழந்தை பால்குடியை கூட மறந்திருக்காது. அட இவன் வளர்ந்ததும் நமக்கு சம்பாதிச்சு போட்டுருவான்ல என பெற்றோர்கள் கனவு காண்பார்கள். மேலும் வளரும் பருவத்திலேயே ஆண் குழந்தையிடம், வேலைக்கு போய்  சம்பாதிச்சு அம்மாவுக்கு வளையல் வாங்கித் தருவ நீ என விளையாட்டாக கேட்போம்.


ஆனால் அந்த ஆண் குழந்தையின் வயதோ 6 அல்லது 7  தான் இருக்கும். இப்படி அவர்கள் வளரும் போதே அவர்களுக்குள் ஒரு நெருக்கடியை உண்டாக்கி விடுகிறோம். சிறுமிகளுக்கு எப்படி பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுகிறதோ அதே போல் ஆண் குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் பாலியல் தொந்தரவு கொடுக்கும் கயவர்கள் நாட்டில் உலவி கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை பல சமயங்களில் நாம் மறந்து விடுகிறோம். சிறுவர்கள் தங்களுக்கு நடக்கும் பாலியல் தொந்தரவுகளை அவ்வளவு எளிதில் வெளியில் சொல்லிவிட மாட்டார்கள். அவர்களை கனிவுடன் பெற்றோர்கள் அணுகினால் உண்மை வெளிவரும்.

படிக்கும் போதோ அல்லது படித்து முடித்து வேலைக்கு போய்விட்ட தருணங்களிலோ காதல் தோல்வியை சந்திக்க நேரும் ஆண் படும் கஷ்டங்கள் அவ்வளவு எளிதல்ல. காதல் தோலிவியால் ஆணின் கண்கள் கலங்கும் போது அருகிலுள்ள நண்பர்கள் அல்லது உறவினர்கள் கூறுவது ஆண் மகனாக இருந்துவிட்டு கலங்கலாமா,, பின் எதற்கு உனக்கு இவ்வளவு பெரிய மீசை என்பார்கள். இதனால் மனதில் உள்ள வலியை வெளிக்காட்ட கூட முடியாமல் அந்த இளைஞரும் அழுகையை மறைத்து சந்தோஷமாக இருப்பது போன்று காட்டிக் கொள்வான். உண்மையில் ஒரு இறுக்கமான மனநிலைக்கு தள்ளப்படுவான். மனதில் நினைப்பதை வெளியில் சொல்ல முடியாமல் தினம் தினம் புழுங்குவது எல்லாம் மரண வலி.

திருமணம் ஆகி குடும்ப பாரத்தை தூக்கி சுமக்கும் ஆண்களுக்கோ ஒருமாதம் சம்பளம் இல்லையென்றால், அவன் நிலை என்னவாகும். பலர் ரத்த அழுத்தம் மண்டைக்கேறி நிகழும் பிரச்னைகளிலிருந்து இந்த வாழ்க்கையே வேண்டாம் என முடித்துக் கொள்ளும் ஆண்களும் பலர் இருக்கின்றனர். பெண்கள் தீபங்களாக ஜொலிக்கிறார்கள் என்றால் அதற்கு காரணமாக இருக்கும் எண்ணெய்யும், திரியும் ஆண்கள்தான். ஒட்டுமொத்த ஆண்கள் சமூதாயத்தை குற்றவாளி போல சிலர் எண்ணுகிறார்கள்.

பெற்றோருக்கு நல்ல மகனாகவும், தன் மனைவிக்கு நம்பிக்கையானவனாகவும், குழந்தைக்கு நல்ல அப்பாவாகவும், சொந்த பிரச்னைகளை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கும் ஒவ்வொரு ஆணும் இங்கு போற்றப்பட வேண்டியவர்கள் தான் என்பதில் மாற்ற கருத்து உண்டா என்ன?. ஒவ்வொரு குடும்பத்தையும் தனது விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் தூக்கி நிறுத்த நினைக்கும், அதனை நடத்திக் கொண்டிருக்கும் அத்தனை ஆண்களுக்கும் ஆண்கள் தின நல்வாழ்த்துகள்...


Tags : Vida ,men ,International Men's Day , Men, Day, Problems, Parents, Vida Try
× RELATED நடிகர் அஜித் மருத்துவமனையில் திடீர் அனுமதி