முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 102-வது பிறந்த நாள்: நினைவிடத்தில் சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி

டெல்லி: முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் 102-வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஒரே மகளான  இந்திராகாந்தி, இந்தியாவின் இரும்பு பெண்மணி என போற்றப்படுகிறார். லால் பகதூர் சாஸ்திரி கடந்த 1966-ம் ஆண்டு மரணமடைந்த பின்னர் இந்திரா நாட்டின் மூன்றாவது பிரதமராகப் பதவியேற்றார். 1966 முதல் 1977 வரை மற்றும் 1980 முதல்  1984 ல் இறக்கும் வரை பிரதம மந்திரி பதவியில் இருந்தார்.

பதவியேற்புக்கு பின்னர், இவர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் வரலாற்றில் மறையாதது. பாகிஸ்தான் போரில் வென்றது, வங்கதேச பிரிவினைக்கு உதவியது, அணு ஆயுத திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியது, பசுமை புரட்சி,  என்று பல கூறிகொண்டே போகலாம். இந்திராகாந்தி நாட்டை வழிநடத்திய மிகவும் மக்களை கவரக்கூடிய, சர்ச்சைக்குரிய அரசியல் தலைவராகவும் இருந்தார். 1917-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி பிறந்த இந்திரா காந்தி, கடந்த 1984-ம் ஆண்டு  அக்டோபர் 31-ம் தேதியன்று, அவரது பாதுகாவலர்களாக இருந்த இரண்டு சீக்கியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102- வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள சக்தி ஸதலத்தில் இந்திராகாந்தியின் நினைவிடத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,  காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். எங்கள் முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா காந்தி ஜி பிறந்த நாளில் அஞ்சலி  செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதேபோல் நாடு முழுவதிலும் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள், கிளை அலுவலங்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் இந்திரா காந்தி பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரது உருவச் சிலைகள் மற்றும் உருவப்படங்களுக்கு மலர்  மரியாதை செலுத்தப்பட்டுவருகிறது.

Related Stories: