புதுச்சேரி: ஆசிரமத்தில் தங்கியிருந்த சகோதரிகளை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் ஆசிரம நிர்வாகிகளுக்கு புதுச்சேரி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. புதுவை ஆசிரமத்தில் தங்கியிருந்த ஹேமலதா நிர்வாகத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில் குடும்பத்தினருடன் அவர் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து ஹேமலதாவின் பெற்றோர் உள்பட 5 பேர் காலாப்பட்டு கடற்கரைக்கு சென்று கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் பெற்றோர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். ஹேமலதா மற்றொரு சகோதரி மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் ஆசிரம நிர்வாகிகள், புதுச்சேரி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து புதுச்சேரி கோர்ட் குற்றம் சாட்டப்பட்டிருந்த அறங்காவலர்கள் மனோஜ் தாஸ் குப்தா, திலிப்குமார் தத்தா, திலிப் மெஹ்தானி, பிரபாகர் ரூபனகுந்தா என்ற பட்டி உள்ளிட்ட 5 பேருக்கும் நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனிடையே ஆசிரம நிர்வாகத்தை உடனடியாக கையகப்படுத்த வேண்டுமென முதல்வர் நாராயணசாமியை பாதிக்கப்பட்ட ஆசிரம சகோதரியில் ஒருவரான ஹேமலதா வலியுறுத்தி உள்ளார். மேலும் ஆசிரமத்தின் இருண்ட விவகாரங்களில் வெளிப்படை தன்மையை கொண்டுவர வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.