×

கோவை, திருப்பூர், நாகர்கோவில் மேயர் பதவி உள்பட அதிமுகவிடம் 25 % இடம் கேட்க பாஜ முடிவு: விருப்ப மனு வினியோகம் விறுவிறுப்பு

சென்னை: பாஜவில் விருப்ப மனு வினியோகம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. அதே நேரத்தில், கோவை, திருப்பூர், நாகர்கோவில் உள்பட  அதிமுக கூட்டணியில் 25 சதவீதம் இடங்களை கேட்க பாஜ முடிவு செய்துள்ளது. தமிழக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜ, கடந்த சனிக்கிழமை முதல் கட்சி ரீதியாக உள்ள மாவட்டங்களில் விருப்ப மனு வினியோகத்தை தொடங்கியுள்ளது. நிறைய பேர் போட்டிப்போட்டு கொண்டு விண்ணப்பித்து வருகின்றனர். சென்னை மேயர் பதவிக்கு மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம், துணை தலைவர் சக்ரவர்த்தி போட்டியிட வேண்டும் என்று விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் கீதா மோகன் பீர்க்கன்காரணை பேரூராட்சி தலைவர் பதவிக்கு பாஜ தேசிய பொதுக்குழு உறுப்பினர் செம்பாக்கம் வேதசுப்பிரமணியத்திடம் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.இதேபோல, மாநிலம் முழுவதும் ஏராளமானோர் போட்டி போட்டு கொண்டு விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர். ஏரராளமானோரிடம் விருப்ப மனுக்களை வாங்க வேண்டும் என்பதற்காக விருப்ப மனு வினியோகம் கடைசி தேதியை பாஜ அறிவிக்கவில்லை. அதே நேரத்தில் கட்சியினரிடம் அதிக ஆர்வம் இருந்து வருவதையடுத்து, அதிமுக கூட்டணியில் உள்ளாட்சியில் அதிக இடங்களை கேட்க பாஜ முடிவு செய்துள்ளது. அதாவது, உள்ளாட்சி அமைப்புகளில் 25 சதவீதம் அளவுக்கு இடங்களை கேட்க பாஜ முடிவு செய்துள்ளது. குறிப்பாக கோவை, திருப்பூர், நாகர்கோவில் மாநகராட்சியையும் பாஜ குறிவைத்து காய்நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

நாகர்கோவில் நகராட்சியாக இருந்த போது நகர் மன்ற தலைவராக பாஜவை சேர்ந்த மீனா தேவ் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவியையும் கேட்க முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பாஜ  நிர்வாகிகள் கூறுகையில், “உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்றால்தான் அடுத்து வர உள்ள சட்டமன்ற தேர்தலில் மக்களை எளிதாக அணுகி வெற்றி பெற முடியும். எனவே, வர உள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் 25 சதவீதம் இடங்களை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 15 சதவீதம் இடங்கள் வரை கேட்டு பெறுவோம். அதற்கும் குறைவாக சீட் தந்தால் வாங்க மாட்டோம். அதன் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம்” என்றனர்.

Tags : Tirupur ,Nagercoil ,Coimbatore ,AIADMK ,Baja ,Mayor , Mayor of Coimbatore, Tirupur, Nagercoil, Baja
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்