×

சேலத்தில் 3 லட்சத்துக்கு ஆண் குழந்தை விற்பனை : காதல் திருமணம் செய்த இளம்பெண், பெற்றோர் மீது கலெக்டரிடம் பரபரப்பு புகார்

சேலம் : சேலம் அருகே பெற்றோரால் ₹3 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்ட குழந்தையை மீட்டு தரக்கோரி, காதல் திருமணம் செய்த இளம்பெண் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். சேலம் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். இதில் ஆட்டையாம்பட்டியை அடுத்த நைனாம்பட்டியைச் சேர்ந்த மீனா என்பவர், தனது கணவர் ராஜாவுடன் வந்து மனு ஒன்றை அளித்தார். இதுகுறித்து மீனா கூறியதாவது: நானும், உறவினரான ராஜாவும் காதலித்து வந்தோம். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 2017 நவம்பரில் திருப்பூர் பெருமாநல்லூரில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்து கொண்டோம்.  தொடர்ந்து, திருப்பூரில் தங்கியிருந்து அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தோம்.
கடந்த ஜூன் மாதம் எனக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கோவை  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். இதுகுறித்து சேலத்தில் உள்ள எனது பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் சேலத்திற்கு என்னை அழைத்து வந்து, 3 ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். அப்போது எனது குழந்தை மற்றும் கணவர் ஆகிய இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், 2 மாதங்கள் வீட்டிற்குள்ளேயே வைத்திருந்து, வேறு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்தனர். அவர்களிடமிருந்து தப்பித்து, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருப்பூரில் உள்ள கணவரிடம் சென்று நடந்த விவரத்தை தெரிவித்தேன். இதனையடுத்து, குழந்தை குறித்து எனது பெற்றோரிடம் கேட்டபோது, குழந்தையை 3 லட்சத்திற்கு விற்றுவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது குழந்தையை மீட்டுத் தரவேண்டும்.
இவ்வாறு மீனா தெரிவித்தார்.

Tags : baby girl ,Salem ,collector , Selling 3 lakhs, baby girl , Salem:
× RELATED 21ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்