நாட்டின் பொருளாதாரம் 5 சதவீதத்துக்கு கீழ் வீழ்ச்சி அடையும் நிலையில் உள்ளது என்ற ஆம் ஆத்மி எம்.பி.யின் கேள்விக்கு, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மக்களவையில் பதில் அளித்தார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய ஆம் ஆத்மி கட்சியின் எம்பி பக்வந்த் மான் நாட்டின் பொருளாதாரம் 5 சதவீதத்துக்கு கீழ் வீழ்ச்சி அடையும் நிலையை எதிர்நோக்கி உள்ளது என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்து மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர் பேசியதாவது: நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. நாட்டின் பொருளாதாரம் 5 சதவீதத்துக்கு கீழ் வீழ்ச்சி அடையும் நிலையில் இல்லை. பொருளாதார வீழ்ச்சி குறித்த புள்ளி விவரங்களை எங்கு இருந்து பெற்றீர்கள். அதனை எனக்கு காட்டுங்கள் பார்ப்போம். உலகில் பல்வேறு நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகின்றது. 2025ம் ஆண்டில் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும். தேசிய புள்ளியியல் அலுவலக தகவலின்படி 2014-2019ம் ஆண்டு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது சராசரியாக 7.5 சதவீதம் ஆகும். இது ஜி-20 நாடுகளிலேயே அதிகபட்ச சதவீதமாகும்.