மக்களைவயில் நேற்று திமுக எம்.பி. கனிமொழி பேசியதாவது:சென்னை ஐஐடி மாணவி பாத்திமா, மரணம் தொடர்பான விசாரணையில் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. இந்த விவகாரத்தில் யாரை பாதுகாக்க முயற்சி நடக்கிறது? காவல் துறையினரின் முதல் தகவல் அறிக்கையில், பாத்திமா குற்றஞ்சாட்டிய பேராசிரியர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. பாத்திமாவின் பெற்றோர், ஐஐடி.யில் அவரது அறைக்கு சென்றபோது அது சுத்தம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. அதாவது ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. பாத்திமா தூக்குப் போட்டுக் கொள்ள பயன்படுத்திய கயிறு கூட அந்த அறையில் இல்லை.
சென்னை ஐஐடி மாணவர்கள் அதிகம் உயிரிழக்கும் இடமாக மாறி வருகிறது. மாணவர்கள் தற்கொலை என்பது வெட்கப்பட வேண்டிய விஷயம்.
இவ்வாறு கனிமொழி பேசினார். இதற்கு பதிலளித்த மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், ‘‘இந்த விவகாரம் குறித்து உயர் கல்வித்துறை செயலாளர் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் சென்னை மாநகர காவல்துறை அறிக்கைக்கு பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். இதேபோல், கேரள ஆர்எஸ்பி கட்சி எம்.பி. பிரேமசந்திரனும் மாணவர்கள் தற்கொலை குறித்து வருத்தம் தெரி வித்தார்.