திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு, அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை தோற்கடித்து வெற்றி பெற்றார். கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் ஆக.9ம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 101 நாட்களுக்கு பின்னர் நேற்று கதிர் ஆனந்த் நாடாளுமன்றத்தில் பதவியேற்றுக் கொண்டார்.
அவர் தமிழிலேயே உறுதிமொழி எடுத்துக் கொண்டார். பின்னர் மத்திய அமைச்சர்களுக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு தனது இருக்கைக்கு சென்றார். இதேபோல், லோக்ஜனசக்தி எம்.பி பிரின்ஸ் ராஜ், பா.ஜ எம்.பி ஹிமாத்ரி சிங், தேசியவாத காங்கிரஸ் எம்.பி சீனிவாஸ் தாதாசாஹிப் படேல் ஆகியோர் நேற்று பதவி ஏற்றனர். இந்நிகழ்ச்சியை திமுக மூத்த தலைவர் துரை முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் பார்வையாளர் மாடத்திலிருந்து பார்வையிட்டனர்.