சென்னை: வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, முன்னணி நடிகர்களை கொண்டு, பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2007-08, 2008-09 ஆண்டுகளில் தனது வருமானத்தை மறைத்து, வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறைக்கு தகவல்வந்தது. அதன்படி அவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2010ம் ஆண்டு சோதனை நடத்தினர். அதில், அவர் வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்தது. இதையடுத்து வருமான வரித்துறையினர் சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிபதி மலர்மதி முன்பு நடந்து வருகிறது.