சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய டாக்டர்களை அரசு பழிவாங்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் 25ம் ேததி முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு டாக்டர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கான சார்ஜ் மெமோவையும் வழங்கியது.
இதையடுத்து, டாக்டர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி தண்டபாணி விசாரித்தார். இந்நிலையில்,டாக்டர்கள் தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.ஆர்.ராஜகோபால் ஆஜராகி, மாற்றப்பட்ட இடத்தில் பதவி ஏற்கவேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் சில டாக்டர்கள் இன்னும் பணியில் சேரவில்லை என்றார். மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் ஆர். சிங்காரவேலன், என்.ஜி.ஆர்.பிரசாத் ஆகியோர், இடமாற்றம் செய்யப்பட்ட 146 டாக்டர்களில் 145 டாக்டர்கள் பதவி ஏற்று விட்டனர். பாலகிருஷ்ணன் என்பவர் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். மனுதாரர்கள் டாக்டர்கள், அவர்களை வேறு விதமாக அரசு நடத்துகிறது வேதனையான விஷயம் என்று வாதிட்டனர்.