வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு படிக்க வந்த வெளிநாட்டு மாணவர்களில் சீனா முதலிடத்தையும், இந்தியா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. அமெரிக்காவில் உயர்க்கல்வி படித்தால், அங்கேயே வேலைவாய்ப்பை பெற்று வாழ்க்கையை சொகுசாக மாற்றிக் ெகாள்ளலாம் என்ற நினைப்பு பல்வேறு நாட்டு மாணவர்களிடம் நிலவுகிறது. இதனால் அமெரிக்காவில் படிக்கச் செல்லும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.2018-19ம் ஆண்டில் அமெரிக்காவுக்கு படிக்க வந்த மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 2019ம் ஆண்டு சர்வதேச கல்வி பரிமாற்றம் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:அமெரிக்காவுக்கு படிக்க வந்த மாணவர்கள் பட்டியலில் சீனா, 3.69 லட்சம் மாணவர்களுடன் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக இந்திய மாணவர்கள் உள்ளனர்.
இந்தியாவில் இருந்து 2.02 லட்சம் மாணவர்கள் மேல்படிப்புக்காக அமெரிக்கா வந்துள்ளனர். 3வது இடத்தில் தென் கொரியாவும் (52,250), 4ம் இடத்தில் சவுதி அரேபியாவும் (37,080), 5வது இடத்தில் கனடாவும் (26,122) உள்ளன. 2018-19ம் ஆண்டில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.வெளிநாட்டு மாணவர்கள் மூலம் 2018ம் ஆண்டில் அமெரிக்காவுக்கு 44.7 பில்லியன் டாலர் வருவாய் கிடைத்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 5.5 சதவீதம் அதிகமாகும். தற்போது அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 10.95 லட்சமாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 0.05 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்க உயர்கல்வி மாணவர்கள் தொகையில் 5.5 சதவீதம் பேர் சர்வதேச மாணவர்கள்.அமெரிக்காவுக்கு படிக்க வரும் மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் (51.6 சதவீதம்) பேர், தண்டுவட செல்களை (ஸ்டெம் செல்) ஆராயும் படிப்பை தேர்ந்தெடுத்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக, கணிதம் மற்றும் கணினி அறிவியல் துறைகளை சர்வதேச மாணவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.