தாம்பரம்: பல்லாவரம் நகராட்சி பகுதிகளில் தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதார கேட்டில் மக்கள் தவித்து வருகின்றனர்.பல்லாவரம் நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நகராட்சிக்கு உட்பட்ட பல பகுதிகளில் துப்புரவு ஊழியர்கள் முறையாக குப்பையை அகற்றுவது இல்லை. குறிப்பாக, திருமலை நகர் பிரதானசாலை, குரோம்பேட்டை, அஸ்தினாபுரம், நெமிலிச்சேரி, ராதா நகர் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் உள்ள சாலை மற்றும் தெருக்களில் தினசரி குப்பை அகற்றப்படாததால், மலைபோல் குப்பை குவிந்துள்ளது. மருத்துவமனை, பள்ளி, குடியிருப்பு பகுதியிலும் தொட்டிகள் நிரம்பி சாலை முழுவதும் குப்பை பரவி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் குப்பை கழிவுகளை குப்பை தொட்டியின் அருகில் உள்ள காலி இடங்களில் கொட்டிவிட்டு செல்லும் நிலை உள்ளது.