முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தேர்வு: தமிழகத்தின் புதிய தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் நியமனம்: கவர்னரின் புதிய செயலாளர் ஆனந்தராவ் பாட்டீல்

சென்னை: தமிழக தலைமை தகவல் ஆணையராக இருந்த ஷீலா பிரியா கடந்த சில மாதங்களுக்கு முன் வயது மூப்பு அடிப்படையில் பணியில் இருந்து விலகினார். இதையடுத்து புதிய தமிழக தலைமை தகவல் ஆணையரை தேர்வு செய்வதற்கான குழு அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில், தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா மற்றும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.வெங்கடேசன் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றிருந்தனர்.இந்த குழு, தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் பரிசீலனை செய்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து குழு பரிந்துரைத்துள்ளவர்களில் ஒருவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று பிற்பகல் நடந்தது.

கூட்டத்தில் தேர்வு குழுவின் உறுப்பினர்களான சபாநாயகர் ப.தனபால், தலைமை செயலாளர் சண்முகம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர் ஸ்வர்ணா ஆகியோர் கலந்துகொண்டனர். மற்றொரு உறுப்பினரான எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை. இதில் தமிழகத்தின் புதிய தலைமை தகவல் ஆணையர் தேர்வு செய்யப்பட்டார். தேர்வு குழுவின் இந்த முடிவை, நேற்று மாலையில் கிண்டி மாளிகையில் உள்ள தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். பின்னர் நேற்று இரவு முறையான அறிவிப்பை கவர்னர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில் கவர்னரின் செயலாளராக உள்ள ராஜகோபால், மாநில தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டார் என்று கூறப்பட்டிருந்தது. ராஜகோபால் 1961ம் ஆண்டு ஜூன் 16ல் பிறந்தார். 1984ம் ஆண்டு ஐஏஎஸ் பணியில் சேர்ந்தார். பல்வேறு மாவட்டங்களில் கலெக்டராகவும், செயலாளராகவும் இருந்தார்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது உள்துறைச் செயலாளராக இருந்தார். பின்னர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மத்திய அரசு பணிக்குச் சென்றார். அதன்பின்னர் கவர்னரின் செயலாளராக நியமிக்கப்பட்டார். தற்போது, அவர் 2021ம் ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு பெற வேண்டும். இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளதால், அவர் தற்போது மாநில தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மாநில தகவல் ஆணையராக நியமிக்கப்படுகிறவர் 3 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை பணியில் இருக்கலாம். இந்த இரு விதிகளில் எது முன்கூட்டி வருகிறதோ அதன்படி அவர் ஓய்வு பெற வேண்டும். இதனால், அவர் 3 ஆண்டுகள் தொடர்ந்து இந்த பணியில் தொடருவார்.

அதேநேரத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குநராக இருந்த ஆனந்தராவ் பாட்டீல், கவர்னரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: