தொட்டியம்: 30வருடம் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) பெறுவது குறித்து ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: விளையாட்டு வீரர்களுக்கு வாரம் ஒருமுறை முழுநாள் பயிற்சி அளிக்கவும், அதே போல விளையாட்டு வீரர்களுக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் நூறு ரூபாய் ஊக்கதொகையை அதிகரித்து தரவும் நடவடிக்கை எடுக்கப்படும். 30 வருடம் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறலாம் என்கிற திட்டம் பரிசீலனையில் உள்ளது. ஒரு வாரத்திற்குள் அது குறித்து அறிவிக்கப்படும்.
நிதி ஆயோக் தர குறியீட்டில் இந்த கல்வி ஆண்டில் தமிழ்நாடு முதல் இடம் பிடிக்கும் என்கிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழ்நாடு தான் பள்ளி இடை நிற்றலில் குறைவாக இருப்பதில் முதலிடம் பிடித்திருக்கிறது. 5 மற்றும் 8ம் வகுப்பு பொது தேர்வில் தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு மட்டும் தான் பொது தேர்வு நடைபெறும். இந்த பொதுதேர்வு மாணவர்களின் கல்விதிறனை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். மாணவர்கள் இடைநிற்றல் என்கிற நிலைக்கு தமிழ்நாடு வழிவகுக்காது.
2021ம் ஆண்டிலும் இந்த அரசு தான் ஆட்சியில் இருக்கும். எடப்பாடி பழனிசாமி, தான் முதலமைச்சராவேன் என கனவிலும் நினைத்திருக்க மாட்டார் என்கிற ரஜினியின் கருத்து பற்றிய கேள்விக்கு, எங்களை பொறுத்தவரை கனவு என்பது நினைவாக மாறியிருக்கிறது. இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.