டெல்லி: டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவையும், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமையில் மாநிலங்களவையும் தொடங்கியது. இந்நிலையில், நாட்டின் உயரிய சபையாக கருதப்படும் மாநிலங்களவைவின் முதல் கூட்டம் 1952-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இதுவரை 249 கூட்டத்தொடர்களை நிறைவு செய்த மாநிலங்களவை, இன்று 250-வது கூட்டத்தொடர் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தொடர் தொடங்கியதும், புதிததாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.,க்கள் பதவியேற்றனர்.
தொடர்ந்து, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மறைந்த மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி , குருதாஸ் தஸ்குப்தா உள்ளிட்டவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பிரதமர் மோடி பேசினார். இதனை தொடர்ந்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். அப்போது; நாட்டின் கூட்டாட்சிக்கு ஆன்மாவைப் போன்றது மாநிலங்களவை. மாநிலங்களவையின் முதல் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பங்களிப்பை நினைவு கூர்ந்து பேசினார்.
சுதந்திரமான நிறுவனங்கள் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்து வருகிறது. மக்கலவையுடன் இணைந்து பணியாற்றுவதில் மாநிலங்களவைக்கு முக்கிய பங்கு உள்ளது. அரசியல் சட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மக்களவையும் மாநிலங்களவையும் மிகவும் அவசியம். மத்திய அரசுக்கு வழிகாட்டுவதில் மாநிலங்களவை முக்கிய பங்காற்றி வருகிறது. அரசு தாக்கல் செய்யும் மசோதாக்களை மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே வழங்கினால் வசதியாக இருக்கும் என கூறினார்.