தமிழகத்தில் பல தலைவர்கள் இருந்தாலும் சர்வ வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

திருநெல்வேலி: தமிழகத்தில் பல தலைவர்கள் இருந்தாலும் எம்ஜிஆர், ஜெயலலிதா, காமராஜருக்கு நிகராக சர்வ வல்லமை பெற்றவர்களாக யாரும் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். நெல்லையில் இன்று பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது உள்ளாட்சி தேர்தல் நாளை நடத்தப்பட்டாலும் பாஜக தயாராக உள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றக்கூடிய பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அனைத்து நிலைகளிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டு விருப்பமனு பெறப்படுகிறது. தேர்தல் கூட்டணி குறித்து கட்சியின் அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும். தமிழகத்தில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, காமராஜருக்கு நிகரான வெற்றிடம் உள்ளது.

தற்போது பல்வேறு தலைவர்கள் உள்ளார்களே தவிர சர்வ வல்லமை பெற்றவர்கள் இல்லை. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகளிலும் தேர்தலுக்காக பாஜக அங்கம் வகித்த கூட்டணி உருவாக்கப்பட்டிருந்தது. அதன்பின் இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு ஆதரவு அளித்திருந்தோம். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்து இப்போது முடிவு செய்ய முடியாது என கூறினார்.

Related Stories: