நீதிமன்றத்தில் இன்றும் ஆஜராகாத பேராசிரியை நிர்மலாதேவி..: ஜாமீனை ரத்து செய்த நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடி உத்தரவு

விருதுநகர்: மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவி இன்றும் ஆஜராகாததால், அவரது ஜாமீனை ரத்து செய்த நீதிபதி அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பி்த்து உத்தரவிட்டுள்ளது. அருப்புக்கோட்டையில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியில் சில மாணவிகளிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக அக்கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடையதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் 3 பேரும் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போதும் நிர்மலாதேவி ஆஜராகவில்லை. முருகன், கருப்பசாமி இருவரும் ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி பரிமளா, மூன்று பேரும் நவம்பர் 18ம் தேதி ஆஜராக உத்தரவிட்டார். அன்று முதல் சாட்சிகளிடம் விசாரணை தொடங்கப்படும் எனவும் அவர் கூறியிருந்தார். அதன்படி, இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கின் முதல் சாட்சியான தேவாங்கர் கல்லூரியின் தாளாளர் ராமசாமி, முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் ஆஜராகினர். ஆனால், நிர்மலா தேவி ஆஜராகவில்லை. இதுகுறித்து விளக்கமளித்த நிர்மலா தேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், பேராசிரியர் நிர்மலாதேவியின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாகவும், அதனால் வழக்கு விசாரணைக்கு இன்று ஆஜராகவில்லை என்றும் தெரிவித்தார்.

ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதி, நிர்மலாதேவிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ததோடு, பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இந்த வழக்கை வரும் 28ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலாதேவியின் வழக்கறிஞர், நிர்மலாதேவி நேற்று என்னிடம் பேசினார். அப்போது, தம்மை தொடர்ச்சியாக மிரட்டுவதாகவும், தமக்கு மனநலம் பாதிப்பதாக உள்ளதாகவும் கூறினார். இதனால், தம்மால் ஒரு நிலையில் இருக்க முடியவில்லை. எனவே மருத்துவமனையில் சேர்க்கும்படி கேட்டுக் கொண்டதற்கிணங்க இன்று அவர் திருநெல்வேலி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். ஆனால் தற்போது அவர் கட்டாயம் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளதால், அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளோம் என்று கூறியுள்ளார்.

Related Stories: