மாநிலங்களவை மற்றும் மக்களவையில் சபாநாயகருக்கு உறுதுணையாக இருக்கும் மார்ஷல்லின் சீருடை மாற்றம்!

புதுடெல்லி: மாநிலங்களவை மற்றும் மக்களவையில் சபாநாயகருக்கு உறுதுணையாக இருக்கும் மார்ஷல்லின் சீருடையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை மற்றும் மக்களவை என இரு அவைகளிலும் சபாநாயகருக்கு அருகே உயரமாக நிற்கும் நபர்களைக் மார்ஷல் என அழைக்கப்படுகின்றனர். சபாநாயகருக்கு இடதுபுறம் நிற்பவர் மார்ஷல் என்று அழைக்கப்படுவார். மற்றொருவர் துணை மார்ஷல் எனப்படுவார். இவர்கள் அவையில் வரம்பு மீறி நடந்துகொள்ளும் நபர்களை வெளியேற்றும் சபாநாயகரின் உத்தரவை நிறைவேற்றுவர். அதேசமயம் சபாநாயகரை நோக்கி அத்துமீறி வருபவர்களையும் தடுத்து நிறுத்துவர். இதனால், அவை நடப்பதற்கு சபாநாயகருக்கு மிகவும் உறுதுணையாக இவர்கள் விளங்கி வருகின்றனர். இவர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பு, நாடாளுமன்ற விதிகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக பல்வேறு தேர்வுகளுக்கு உட்படுத்தப்படுவர்.

மார்ஷல் மற்றும் துணை மார்ஷல்கள் அரசியலமைப்பு சட்ட விதிமுறைகளின் படி சீருடை அணிந்து வருவது வழக்கமாகும். இந்த நடைமுறை மீராகுமார் சபாநாயகராக இருக்கும் போது மாற்றம் செய்யப்பட்டது. அதன்பிறகு தொடர்ச்சியாக ஒரேமாதிரியான சீருடை அணிந்து வந்தனர். கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது சஃபாரி ஆடை மற்றும் நீண்ட தலைப்பாகை அணிந்திருந்த நிலையில், இம்முறை அவர்களது சீருடையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் அணிவது போன்ற சீருடையுடன் மார்ஷல்கள் காணப்பட்டனர். புதிய சீருடை அணிந்திருந்த மார்ஷல்கள், மாநிலங்களவை சபாநாயகரும், துணை குடியரசுத் தலைவருமான வெங்கையா நாயுடுவை இன்று அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். இந்த புகைப்படங்கள் சமூகவைலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: