144 தடையையும் மீறி நாடாளுமன்றம் நோக்கி ஜே.என்.யு மாணவர்கள் பேரணி : பிரச்சனையை பேசித் தீர்க்க உயர்மட்டக் குழுவை அமைத்தது மத்திய அரசு

டெல்லி : விடுதி கட்டண உயர்வை திரும்பப் பெற கோரி டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் 144 தடை உத்தரவையும் மீறி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக புறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் எதிரொலியாக மாணவர்களின் பிரச்சனையை பேசித் தீர்க்க மத்திய அரசு உயர்மட்டக் குழுவை அமைத்தது.

விடுதி கட்டண உயர்வை கண்டித்து போராட்டம்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதி கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டதை கண்டித்து மாணவர்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல கட்ட போராட்டத்தின் எதிரொலியாக உயர்த்தப்பட்ட கட்டணத்தை 50% குறைத்தும் அதனை ஏற்காத மாணவர்கள் கட்டண உயர்வை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில், கவனத்தை ஈர்க்கும் வகையில் நாடாளுமன்றம் நோக்கி பேரணிச் செல்வதாக ஏற்கனவே மாணவர்கள் அறிவித்தனர். அதனால் நாடாளுமன்ற வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தடையை மீறி மாணவர்கள் பேரணி

ஆனால் தடையை மீறி மாணவர்கள் பேரணியைத் தொடர்ந்ததால் காவல்துறையிருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. முழக்கங்களை எழுப்பியவாறு சென்ற மாணவ-மாணவிகள் சிறிது தூரத்திலேயே பெர் சாராய் (Ber sarai) சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இரும்புத் தடுப்புகளை வைத்து போலீசார் தடுத்து நிறுத்தியதைத் தொடர்ந்து, அதை மீறிச்செல்ல மாணவ-மாணவிகள் முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. கல்வி என்பது அடிப்படை உரிமை தானே தவிர விற்பனைக்கு உரிய பொருள் அல்ல என்பதை எம்பிக்கள் அனைவரும் உணர வேண்டும் என்பதை வலியுறுத்தியே நாடாளுமன்றத்திற்கு பேரணி புறப்பட்டதாக மாணவர்கள் கூறியுள்ளனர்.

 உயர்மட்டக்குழு அமைப்பு

இந்த நிலையில், மாணவர்கள் போராட்டம் தொடர்பாக  மத்திய அரசு, உயர்மட்டக்குழு ஒன்றை அமைத்துள்ளது. யுஜிசி முன்னாள் தலைவர் வி.எஸ்.சவுகான், ஏ.ஐ.சி.டி.யு தலைவர் சகாஸ்ரபுத்தே, யுஜிசி செயலாளர் ரஜினிஸ் ஜெயின் ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளனர். உயர்மட்டக்குழு, மாணவர்களுடன் பேசி இந்த பிரச்னைக்குத் தீர்வு காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: