×

2 ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தை சுத்தம் செய்த இளைஞர்கள்

*தேசிய நெடுஞ்சாலைதுறை அலட்சியம்

கொள்ளிடம் : கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை கண்டுகொள்ளாததால் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச்சாவடிக்கும், கடலூர் மாவட்டம் வல்லம்படுகைக்கும் இடையே கொள்ளிடம் ஆற்றுப்பாலம் சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கடந்த 1957ம் ஆண்டு முதல் இந்தப் பாலத்தின் வழியே போக்குவரத்து துவங்கியது. சென்னையிலிருந்து கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி மார்க்கமாக கன்னியாகுமரி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்தில் இந்த பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. இரவு பகல் என 24 மணி நேரமும் நொடி பொழுது கூட ஓய்வு இன்றி இந்தப்பாலத்தின் வழியே அனைத்து ரக வாகனங்களும் சென்று கொண்டிருக்கின்றன.

தொடர்ந்து அதிகாரிகளால் பராமரிக்கப்பட்டு வந்த இந்த கொள்ளிடம் ஆற்றுப்பாலம், கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக முறையாக பராமரிக்கவில்லை. இதனால் பாலத்தின் துவக்கத்தில் இரு புறங்களிலும் புதர் மண்டி காணப்படுகிறது. மின்விளக்குகள் பராமரிக்கப்படவில்லை. இரவு நேரங்களில் இருண்டே கிடக்கிறது. பாலம் முழுவதும் இரண்டு பக்கங்களிலும் மண் படிந்துள்ளதால், பாலத்தில் தேங்கும் நீரை வெளியேற்றும் அனைத்து குழாய்களும் அடைக்கப்பட்டுள்ளன.

இதனால் மழை நீர் சாலையின் இருபுறங்களிலும் தேங்கி நிற்கிறது. வாகனங்கள் பாலத்தின் வழியே செல்லும் போது சாலையோரம் தேங்கிய நீர் நடைபாதையில் நடந்து செல்வோர்களின் மீதும், இரு சக்கர வாகனங்களில் செல்வோர்கள் மீதும் படுகிறது. இதனால் மக்கள் அவதியைச் சந்திக்கிறனர். தண்ணீர் பாலத்தில் தேங்கியே நிற்பதால் எளிதில் பாலம் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பாலத்தை சரி செய்யவும், சுத்தம் செய்யவும், முறைப்படி பராமரிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு, பலமுறை கோரிக்கை விடுத்தும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பாலத்தை பராமரிக்கவில்லை.

எனவே பொதுமக்கள் சார்பில் வல்லம்படுகையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் பொறியாளர் ரமேஷ் தலைமையில் 25 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தை உரிய கருவிகளுடன் வந்து பாலம் துவங்கும் இடத்திலிருந்து துவங்கி முழுப்பாலத்தை சுத்தம் செய்தனர். பாலத்தின் இரண்டு பக்கங்களிலும் குவிந்த கிடந்த மண்ணை அகற்றி அடைபட்டுக்கிடந்த தண்ணீர் வெளியேறும் குழாய்களில் ஏற்பட்டிருந்த அடைப்புகளையும் அகற்றினர்.

நேற்று தொடர்ந்து 4 மணி நேரம் இளைஞர்கள் இந்தப் பாலத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து பொறியாளர் ரமேஷ் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றுப்பாலம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிக்கப்படாமல் உள்ளது. தொடர்ந்து பராமரிக்கவில்லை என்றால் பாலம் உடையும் அபாயம் ஏற்படும் முறையாக பராமரிப்பு செய்தால், மேலும் 50 ஆண்டுகளுக்கும் வலிமை குன்றாமல் இருக்கும். பாலம் திடீரென உடையும் நிலை ஏற்பட்டால் 50 கிலோ மீட்டர் தூரம் அதிகமாகச் சென்று சுற்று வழியில் பயணிக்கும் சூழ்நிலை ஏற்படும். எனவே இதுவரை வலிமை குன்றாத பாலத்தை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முறைப்படி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : youths ,river ,Kalli ,Younsters ,National Highway Bridge , Younsters ,National Highway Bridge,Kollidam ,2 years
× RELATED டாஸ்மாக் கடையை உடைக்க முயன்ற கைதான நான்கு வாலிபர்களுக்கு சிறை