குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளே அமளி: மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

டெல்லி: டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவையும், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமையில் மாநிலங்களவையும்  தொடங்கியது. இந்நிலையில், நாட்டின் உயரிய சபையாக கருதப்படும் மாநிலங்களவைவின் முதல் கூட்டம் 1952-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இதுவரை 249 கூட்டத்தொடர்களை நிறைவு செய்த மாநிலங்களவை, இன்று 250-வது  கூட்டத்தொடர் நடைபெற்றது.

இன்றைய கூட்டத்தொடர் தொடங்கியதும், புதிததாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.,க்கள் பதவியேற்றனர். தொடர்ந்து, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மறைந்த மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், பிரபல வழக்கறிஞர்  ராம்ஜெத்மலானி , குருதாஸ் தஸ்குப்தா உள்ளிட்டவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு கூறுகையில், அருண் ஜெட்லியின் நாடாளுமன்ற பேச்சுகள் என்றும் மறக்க முடியாதவை என்று புகழாரம் சூட்டினார். வழக்கறிஞராக பணியை துவக்கி மத்திய அமைச்சராக இந்த நாட்டிற்கு  சேவைகள் புரிந்துள்ளார். கிரிக்கெட் சங்கத்திலும் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். இந்த நாடு ஒரு சட்ட நிபுணரை இழந்து விட்டது. சட்டம், பொருளாதாரம் என பல துறைகளில் சிறந்து விளங்கியவர். இவரது நாட்டின் பங்களிப்பு மறக்க  முடியாதது என்றார்.

தொடர்ந்து, மக்களவையில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பான விவாதத்தை காங்கிரஸ் கட்சி எழுப்பியது. மகாராஷ்டிராவில் விவசாயிகளுக்கான நிவாரணம் உயர்த்தி வழங்க வேண்டும் என சிவசேனா எம்பி.,க்கள் எழுப்பினர்.  காஷ்மீரில் எதிர்கட்சி தலைவர்கள் வீட்டுச்சிறையில் 108 நாட்களாக வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்க வேண்டும், இவர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டு கட்சி எம்பி.,க்கள் வலியுறுத்தினர். இதனால், அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டதையடுத்து மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.

Related Stories: