ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு தொடர்ந்து உள்ள வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆக. 21ம் தேதி சிபிஐ அமைப்பால் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். சிபிஐ விசாரணை முடிந்த நிலையில் திகார் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால், ப.சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கடந்த அக்.16ம் தேதி மீண்டும் கைது செய்தனர்.

அமலாக்கப்பிரிவு காவல் முடிந்த நிலையில் கடந்த 13ம் தேதி வரை ப.சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றக் காவல் முடிந்த நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரத்துக்குக் காவலை வரும் 27ம் தேதி வரை நீட்டித்துச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே ப.சிதம்பரம் தனது உடல்நலக்குறைவைக் காரணம் காட்டி தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அவரின் வழக்கறிஞர் கபில் சிபல் மூலம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது அமலாக்கப்பிரிவு, ப.சிதம்பரம் தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்திருந்தார்.

இந்நிலையில் ப.சிதம்பரம்பரத்துக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் கெய்த், கடந்த வெள்ளிக்கிழமையன்று மறுப்பு தெரிவித்தார். ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு தொடர்ந்து உள்ள வழக்கில் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் சார்பில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையிட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுள்ள உச்சநீதிமன்றம், செவ்வாய் அல்லது புதன் அன்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.

Related Stories: