கான்பூர்: விவசாயிகளிடம் கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு கூடுதல் இழப்பீடு கோரி உத்தர பிரதேசத்தில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. உத்தர பிரதேசத்தில் ‘டிரான்ஸ் கங்கா சிட்டி’ என்ற நகரை உருவாக்குவதற்காக விவசாயிகளிடம் இருந்து நிலங்களை உத்தரப் பிரதேச தொழிற்சாலை மேம்பாட்டு கார்பரேஷன் (யுபிஎஸ்ஐடிசி) கையகப்படுத்தியது. இதற்கு கூடுதல் இழப்பீடு வழங்கக்கோரி உன்னாவ் மாவட்டம், சுக்லகன்ஜ் பகுதியில் விவசாயிகள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். இதில், விவசாயிகள் திடீரென வன்முறையில் இறங்கி, கல்வீச்சில் ஈடுபட்டனர். வாகனங்களை சூறையாடினர். புதிதாக கட்டி வந்த மின் நிலையத்துக்கு தீ வைத்தனர். சிமென்ட் மிக்சர் லாரி ஒன்றுக்கும் தீ வைக்கப்பட்டது. போலீசாரும், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் போராட்டக்காரர்களை விரட்டினர். இந்த வன்முறை தொடர்பாக 38 விவசாயிகள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.