தாம்பரம்: தாம்பரம் அடுத்த செம்பாக்கம் நகராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வசதிக்காக, கடந்த 2004ம் ஆண்டு டி.ஆர்.பாலு எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதி 8 லட்சத்தில், நகராட்சிக்குட்பட்ட திருமலை நகர், 4வது தெருவில் சமுக நலக்கூடம் கட்டப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. பின்னர், சமூக நலக்கூடத்திற்கு உணவு கூடம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். அதையேற்று, டி.ஆர்.பாலு எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 13 லட்சத்தில், சமுக நலக்கூடத்தின் மேல்தளத்தில் உணவு கூடம், கடந்த 2013ம் ஆண்டு அமைக்கப்பட்டது. ஆனால், இதுவரை உணவு கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை நகராட்சி அதிகாரிகள் இங்கு குவித்து வைத்தனர். அவற்றை இதுவரை அகற்றாததால், பொதுமக்கள் உணவு கூடத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கீழ்தளத்தில் விழா நடத்தும் பொதுமக்கள் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் சமையல் செய்து, சாமியானா பந்தல் அமைத்து உணவு பரிமாறி வருகின்றனர்.