புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற்றுள்ள நிலையில், 13 ஆண்டுக்குப் பிறகு கொலிஜியம் உறுப்பினராகும் பெண் நீதிபதி என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த நீதிபதி பானுமதி பெற்றுள்ளார்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. அவர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற கொலிஜியம் குழுவில் ஒரு இடம் காலியானது. உச்ச நீதிமன்றத்தின் முதல் 5 மூத்த நீதிபதிகள் கொலிஜியம் குழுவில் இடம் பெற்றிருப்பர். இக்குழுதான், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும்.இந்நிலையில், தலைமை நீதிபதி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, தமிழகத்தை சேர்ந்த பெண் நீதிபதி பானுமதி கொலிஜியம் உறுப்பினராகி உள்ளார். இக்குழுவில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் நீதிபதி ஒருவர் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. நீதிபதி பானுமதி அடுத்த 9 மாதத்திற்கு கொலிஜியம் உறுப்பினராக இருப்பார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜூலை 19ம் தேதியுடன் நிறைவடைகிறது. இனி, கொலிஜியம் குழுவில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, பாலி நாரிமன், பானுமதி ஆகியோர் இருப்பர்.