சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் சுயசரிதை நூல் வெளியீடு அதிமுக ஆட்சியை விரட்டியடிப்போம்: கால் இழந்த பெண்ணுக்கு 5 லட்சம்.....மு.க.ஸ்டாலின் சூளுரை

சேலம்: மாநில உரிமைகளை இழக்கும் அநியாய அதிமுக ஆட்சியை விரட்ட தொடர்ந்து போராடுவோம் என சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் சுயசரிதை நூலை வெளியிட்டு மு.க.ஸ்டாலின் பேசினார்.சேலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் சுயசரிதை நூல், “திராவிட இயக்க வரலாற்றில் என் பயணம்” என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த நூல் வெளியீட்டு விழா நேற்று காலை சேலத்தில் நடந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். துணை பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்  வீரபாண்டி ராஜா வரவேற்றார். விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நூலை வெளியிட்டு பேசியதாவது:தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அரசு பெயர் வைத்திருந்தாலும், சேலம் மாவட்டம், வீரபாண்டியார் மாவட்டம் என்றே அழைக்கப்படுகிறது. அந்த அளவிற்கு தன் கைக்குள் இந்த மாவட்டத்தை வைத்திருந்தார். திமுக  வரலாற்றை எழுதும்போது வீரபாண்டியாரை தவிர்த்து எழுத முடியாது. 400 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை படித்தால், அவரின் முழு தியாகத்தையும் புரிந்து கொள்ள முடியும். அனைத்து தொண்டர்களும் இதனை வாங்கி படிக்க  வேண்டும்.

இன்றைக்கு சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக மிசாவில் ஸ்டாலின் கைதானாரா என்ற ஒரு விவாதத்தை திட்டமிட்டு வதந்தியாக பரப்பி வருகிறார்கள். எதை விமர்சிக்க வேண்டும் என்ற விவஸ்தை கூட இல்லை. இது விவாதம்  நடத்தவேண்டிய தலைப்பா? ஸ்டாலின் திமுகவை சேர்ந்தவரா என்று எந்த முட்டாளாவது கேட்பானா?. அதேபோன்ற முட்டாள்தனம் தான், விவாதத்தை கிளப்புகிறவனின் செயலாக இருக்கிறது. கருணாநிதியிடம் பிடிவாதம் பிடிக்கும் ஒரே மாவட்ட செயலாளர் வீரபாண்டியார். தலைவரின் படைத்தளபதிகளில் முன்னின்றவர். அவர் மீது 50 வழக்குகளுக்கு மேல் போட்டுள்ளனர். திமுகவில் குடும்ப அரசியல் செய்கிறார்கள் என்று  இன்றைக்கு சொல்கிறார்கள். ஆனால் திமுகவுக்காக குடும்பம் குடும்பமாக உழைத்தவர்கள் இருக்கிறார்கள். குடும்ப அரசியல் என்று சொல்லும் நபர்கள், இந்த புத்தகத்தை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். குடும்பங்களின் உழைப்பு,  தியாகத்தால் இந்த இயக்கம் வளர்ந்துள்ளது. நாட்டின் சூழ்நிலையை எண்ணிப்பார்த்து, திமுக பொதுக்குழுவில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில், சிறப்பு தீர்மானமாக ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான மாநில உரிமைகளை இழப்பதில் இருந்து நாட்டை காப்பாற்ற தீர்மானம்  கொண்டு வந்துள்ளோம். அதை மக்களிடம் தொடர்ந்து எடுத்துச் சொல்ல வேண்டும். தமிழகத்தில் மாநில உரிமைகளை இழக்கும் அநியாய அதிமுக ஆட்சியை அழிக்கவும், ஒழிக்கவும், விரட்டியடிக்கவும் சூளுரைப்போம். அதற்காக தொடர்ந்து  போராடுவோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று கோவை அவினாசி ரோட்டில்  கடந்த 11ம் ேததி வைக்கப்பட்ட அதிமுக கொடிக்கம்பம் சாய்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் இரண்டு டூவீலர்கள் மீது லாரி மோதியது. இதில், ராஜேஸ்வரி(30),  விஜய்ஆனந்த்(32) ஆகியோர் காயம் அடைந்தனர். இவர்களில்  லாரியின் டயர் ஏறியதில் ராஜேஸ்வரியின் கால்கள் நசுங்கியது. தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரும் ராஜேஸ்வரியின் இடது கால்  அகற்றப்பட்டது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மருத்துவமனைக்கு நேரில் சென்று ராஜேஸ்வரியை சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். திமுக சார்பில் மருத்துவ செலவிற்காக ₹5 லட்சம் நிதியை அவரது பெற்றோரிடம்  வழங்கினார். ராஜேஸ்வரிக்கு செயற்கை கால் பொருத்துவதற்கான செலவினை திமுக ஏற்றுக் கொள்ளும் எனவும் தெரிவித்தார்.இதைதொடர்ந்து மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், `இந்த விபத்தில் லாரி டிரைவர் மீது மட்டுமே ேபாலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிமுக கொடி கம்பத்ைத கட்டியவர்கள் மீதும், கட்சி நிர்வாகிகள் மீதும் எந்த  நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து தமிழக முதல்வரை செய்தியாளர்கள் சந்தித்து கேள்வி எழுப்பிய போது, இதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார். இது வெட்கப்பட வேண்டிய செயல். அவரது மருத்துவ  செலவை ஏற்க தமிழக அரசு முன் வரவேண்டும்’ என்று தெரிவித்தார். அவருடன், எம்எல்ஏ கார்த்திக், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, சேலம் மாவட்ட செயலாளர் சிவலிங்கம் உடனிருந்தனர்.

Related Stories: