நாடாளுமன்ற தொடர் இன்று ஆரம்பம்

* பரூக்கை விடுவிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

* மத்திய அரசு மவுனம்

புதுடெல்லி:  நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் காஷ்மீர் முன்னாள் முதல்வரும், எம்.பி.யுமான பரூக் அப்துல்லாவை கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில்  வலியுறுத்தப்பட்டது. ஆனால், இதற்கு அரசு எந்த உறுதியும் அளிக்கவில்லை. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதை முன்னிட்டு, அவையை சுமூகமாக நடத்துவது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நேற்றும், நேற்று முன்தினமும் கூட்டப்பட்டது. மக்களவை சபாநாயகர் ஓம்  பிர்லா நேற்று முன்தினம் கூட்டிய கூட்டத்தில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார். அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தரும்படி அவர் கேட்டுக் கொண்டார். இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியும் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு நேற்று அழைப்பு விடுத்திருந்தார். இதில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநிலங்களவை எதிர்க்கட்சி  தலைவர் குலாம் நபி ஆசாத், மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி, திரிணாமுல் சார்பில் தெரிக் ஓ பிரைன் உட்பட 27 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ‘‘அவை விதிமுறைகளின்படி அனைத்து விஷயங்களை பற்றியும் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. கடந்த கூட்டத் தொடரை போல், இந்த கூட்டத் தொடரும் பயனுள்ளதாக இருக்க  வேண்டும்’’ என்றார். நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட தேசிய மாநாட்டு கட்சி எம்பி.யான ஹஸ்நைன் மசூத், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கைது விவகாரத்தை  எழுப்பினார். நாடாளுமன்ற கூட்டத்தில் பருக் அப்துல்லா பங்கு பெறுவதை  உறுதி செய்ய வேண்டிய அரசியல் சாசன கடமை அரசுக்கு உள்ளது என அவர் கூறினார். குலாம் நபி ஆசாத் பேசுகையில், ‘‘ஒரு எம்.பியை எப்படி சட்ட விரோதமாக கைது செய்து வைத்திருக்க முடியும்? நாடாளுமன்ற கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்’’ என்றார். ஆனால், இதற்கு அரசு எந்த உறுதியான  பதிலும் அளிக்கவில்லை.

இந்த கூட்டத்துக்குப்பின் பிரதமர் மோடி டிவிட்டரில் வெளியிட்ட தகவலில், ‘நாடாளுமன்ற கூட்டம் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதில் மக்கள் மற்றும் வளர்ச்சி தொடர்பான விஷயங்கள் ஆலோசிக்கப்படும்,’  என்றார். வரும் 26ம் தேதி அரசியல் சாசன தினம் கொண்டாப்பட உள்ளது. இதை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்பு கூட்டு கூட்டத்தை கூட்ட திட்டமிடப்பட்டுள்ளது. குளிர்கால கூட்டம் அடுத்த மாதம் 13ம் தேதி முடிவடையும்.

சிவசேனா எம்.பி.க்களுக்கு எதிர்கட்சி வரிசையில் இடம்

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நேற்று அளித்த பேட்டியில், ‘‘தே.ஜ கூட்டணி அரசிலிருந்து சிவசேனா விலகியுள்ளது. நேற்று நடந்த தே.ஜ கூட்டணி கூட்டத்தில் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. அந்தக் கட்சி  காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனால், சிவசேனா எம்.பி.க்களுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி வரிசையில் இடம் ஒதுக்கப்படும்’’ என்றார்.

27 மசோதாக்கள்

இந்தக் கூட்டத்தொடரில் மொத்தம் 27 மசோதாக்கள் மற்றும் சட்டத்திருத்த மசோதாக்களை தாக்கல் செய்து ஒப்புதல் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில், வரிகள் சட்ட திருத்த மசோதா, பல மாநிலங்களில் இயங்கும் கூட்டுறவு  சொசைட்டிகள் ஒழுங்கு மசோதா, கம்பெனி சட்ட இரண்டாவது சட்ட திருத்த மசோதா, குடிமக்கள் சட்ட திருத்த மசோதா, தனி தகவல்கள் பாதுகாப்பு மசோதா, விமானங்கள் சட்ட திருத்த மசோதா உள்ளிட்டவை அடங்கும்.

Related Stories: