வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல்: கொடைக்கானலில் குளிர் சீசனை அனுபவிக்கவும், வார விடுமுறையை கொண்டாடவும் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் குவிந்துள்ளனர். ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படும் கொடைக்கானலில் ‘ஆப் சீசன்’ முடிந்த நிலையில், நவம்பர், டிசம்பர் மாதங்களில் நிலவும் குளிர் சீசன் துவங்கியுள்ளது. இந்த சீசனில் கொடைக்கானலில் நிலவும் தட்பவெப்ப நிலை குறைந்து குளிராகவே இருக்கும். இதனை அனுபவிக்கும் விதமாக சுற்றுலாப்பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். சனி, ஞாயாறு வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.

மோயர் பாயின்ட், குணா குகை, பைன் பாரஸ்ட், க்ரீன் வேலி வியூ எனப்படும் தற்கொலை முனை, தூண் பாறை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் தலைகளே தென்பட்டன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, கரடிச்சோலை, பியர் சோழா நீர்வீழ்ச்சிகளில் பரவலாக தண்ணீர் கொட்டுகிறது. இங்கும் சுற்றுலா பயணிகள் குவிந்து இயற்கையழகை கண்டு ரசித்தனர்.

Related Stories: