×

இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்ச 48.59% வாக்குகள் பெற்று முன்னிலை...சஜித் பிரேமதாசவுக்கு பின்னடைவு

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச முன்னிலையில் உள்ளார். இலங்கையில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் அதிபர் தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில்   மொத்தம் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இலங்கை அதிபர் தேர்தலில் இவ்வளவு பேர் போட்டியிட்டது இதுவே முதல் முறை. ஆனால், தற்போது பதவியில் உள்ள இலங்கை அதிபரோ, பிரதமரோ அல்லது எதிர்கட்சி தலைவரோ யாரும்   இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் தம்பியான கோத்தபய ராஜபக்சே(70), அந்த  நாட்டின் பொதுஜன பெரமுனா கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது. இதற்காக, நாடு முழுவதும் 12,845 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 1 கோடியே 59 லட்சம் வாக்காளர்கள் இந்த தேர்தலில்   ஓட்டுப்போட தகுதி பெற்றிருந்தனர். தேர்தல் பணியில் 4 லட்சம் அரசு அதிகாரிளும், 60 ஆயிரம் போலீசாரும், பாதுகாப்பு படையினர் 8 ஆயிரம் பேரும் ஈடுபடுத்தப்பட்டனர். ஐரோப்பிய யூனியன் தேர்தல் பார்வையாளர்களும் அதிபர் தேர்தலை   கண்காணித்தனர்.

பலத்த பாதுகாப்புக்கு இடையே தேர்தல் நடந்தாலும், பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இலங்கையில் நேற்று 100க்கும் மேற்பட்ட இடங்களில் வன்முறை நடந்துள்ளது. இலங்கையில் அதிபரை தேர்வு செய்வதில்,   சிறுபான்மையினரான தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஓட்டுக்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. பல இடங்களில் மழை பெய்தாலும், அதையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்தனர். வாக்குப்பதிவு நேற்று மாலை 5 மணியுடன்  நிறைவடைந்த நிலையில், 81.52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 355 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.

தற்போதைய, தகவலின்படி, இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச சுடுதல் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். கோத்தபய 15 லட்சத்து 67 ஆயிரத்து 958 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப்  போட்டியிட்ட  புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசா 14 லட்சத்து, 50 ஆயிரத்து 508 வாக்குகள் பெற்றுள்ளார். சஜித்தை விட கோத்தபய ராஜபக்சே 1,17,450 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். இருவருக்கும் இடையே இழுபறி  நிலை நீடித்து வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சஜித், கோத்தபய மாறி மாறி முன்னிலை பெற்றுவருவதால் இலங்கை அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாச யாழ்ப்பாணம், திருகோணமலை, திகாமடுல்லை, நுவரெலியா மற்றும் வன்னி உள்ளிட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளார். கோத்தபய ராஜபக்சே  காலி, மொனராகலை, கம்பகா, ரத்தினகிரி, மாத்தளை, கொழும்பு,  பதுள்ளை, களுத்துறை, பொலன்னறுவை, மற்றும் அப்பாந்தோட்டை உள்ளிட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளார்.



Tags : election ,Sri Lankan ,Gotabhaya Rajapaksa ,Sajith Premadasa ,candidate ,PA , Sri Lankan presidential election: Sri Lanka's PA candidate Gotabhaya Rajapaksa leading with 48.59% of votes ... Sajith Premadasa
× RELATED இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஷூ வாங்கி தராததால் வாலிபர் தற்கொலை