பெரம்பூர்: சென்னை திரு.வி.க.நகர் கே.சி கார்டன் பகுதியில் மூன்று கொலை மற்றும் 15 வழக்குகளில் தொடர்புடைய அருண் (எ) கெண்டை அருண் என்பவர், பிரபல ரவுடியாக வலம் வருகிறார். இவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும் போலீசார் சிசிடிவி கேமரா அமைத்தனர்.
இது தனக்கு இடையூறாக இருப்பதாக கருதிய ரவுடி அருண், தனது கூட்டாளிகளான கே.சி.கார்டன் பகுதியை சேர்ந்த ராகுல் (19), இளங்கோ (19), ஜானகிராமன் (21), பரத் (21) ஆகியோர் மூலம், அந்த சிசிடிவி கேமராக்களை உடைத்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, சிசிடிவி கேமராக்களை உடைந்த மேற்கண்ட 4 பேரை கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகளான கெண்டை அருண், பென்சில் கார்த்திக் ஆகியோரை தேடி வருகின்றனர்.