சென்னை: உள்ளாட்சி தேர்தல் குறித்து வரும் 22ம் தேதி திருச்சியில் அமமுக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் விருப்பமனு வினியோகம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆனால், அமமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. கட்சியில் இருந்து ஏராளமான முக்கிய நிர்வாகிகள் வெளியேறியதால் பல்வேறு கட்சி நடவடிக்கைகள் முடங்கிபோய் காணப்படுகிறது. இந்தநிலையில், வரும் 22ம் தேதி திருச்சியில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: அமமுக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வருகிற 22ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி அளவில் திருச்சி பெமினா ஓட்டலில் உள்ள காவிரி அரங்கில் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. எனவே ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.