திருச்சி: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மகள் ஜெனிபர்(19). இவர் திருச்சி காஜாமலை வளாகத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலையில் எம்எஸ்சி 2ம் ஆண்டு படித்து வருகிறார். பல்கலை விடுதியில் தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் விடுதி அறையில் மயங்கிய நிலையில் இருந்த ஜெனிபரை சகதோழிகள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்களிடம் பினாயிலை குடித்து விட்டதாக கூறியுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கன்டோன்மென்ட் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி ஜெனிபர் எழுதி வைத்த 2 பக்க கடிதத்தை கைப்பற்றினர். அதில், சரோ, கஜா சாரி டி. உங்களை விட்டு போகிறேன். நாம் எச்ஓடிக்கு எதிராக ஒண்ணும் பண்ண முடியாது. என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது. இப்படி கொடுமைப்படுத்தும் துறைத்தலைவர் மாறுவாரா. நான் போனதற்கு பின்னர் மாறுவாரா. நாளைக்கு உங்களுக்கும் இதே நிலை தான் என எழுதி இருந்தார். இதற்கிடையில் ஜெனிபரின் தாய் செல்வி மற்றும் சக மாணவிகள் மற்றும் தோழிகள் நேற்று மாலை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் அமல்ராஜை சந்தித்து துறைத்தலைவரான பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் கூறி அனுப்பி வைத்தார்.