பெ.நா.பாளையம்: கோவை அருகே நேற்று அதிகாலை ஊருக்குள் புகுந்த 5 காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்ட முயன்றபோது அங்குள்ள டிரான்ஸ்பார்மர் மீது மோதின. இதில் தீப்பொறி கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய ஆனைகட்டி, மாங்கரை, பாலமலை, தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இவை அவ்வப்போது குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்நிலையில் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் புகுந்த 5 காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் உலா வந்தது. தகவலறிந்து பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.